புதன், 16 மே, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-10. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-10. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

குலசேகரஆழ்வார்பிறந்தஊர்
பாம்புக் குடத்தில் கை இட்டவர்.
ஏன் பாம்புக் குடத்தில் கை இடவேண்டும்?
ஏதாவது வேண்டுதலா?அதுக்குன்னு ஒரு பாட்டா?ஆமாங்க! பாம்புக் குடத்தில் கை இட்டும் அவரைப் பாம்பு கடிக்கவில்லைன்னா
பாருங்க!!
வேண்டுதல்லாம் இல்லங்க!! தான் தப்பு செய்துட்டோமோன்னு தன்னைத்தானே வருத்திக்கொள்ள இந்த மாதிரி செய்துட்டவர்.
இப்படியெல்லாம் கூட மக்கள் இந்தக காலத்தில் உண்டா? அப்படின்னு நீங்க
கேட்கறது காதுலே விழுது.
இதெல்லாம் நடந்தது இன்னிக்கு இல்லைங்க,
குலசேகர ஆழ்வார்,
அவர்தான் இத்தனையும் செய்தவர்.
கீழே உள்ள பாசுரத்தைப் படியுங்க, உங்களுக்கே புரியும்.
       "ஆரம் கெடப்பரன் அன்பர் கொள்ளார்* என்று அவர்களுக்கே
              வாரம் கொடு குடப் பாம்பில் கையிட்டவன்* மாற்றலரை
        வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்* வில்லவர்கோன்
              சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணியெ.
மேலே குறிப்பிட்ட பாடல் அவரைப் பத்தித்தான்
அது குலசேகர ஆழ்வார் பற்றிய சரித்திரம் தெரிந்தால் உஙகளுக்குப் புரிந்துவிடும்.
அது என்னய்யா சரித்திரம் என்கிறீர்களா?
குலசேகரர் சேரநாட்டை ஆண்டு வந்தார்.அவர் வீரமும் விவேகமும் உடைய அரசராக  சிறப்பாக ஆண்டு வந்தார். கடவுள் பக்தி உடையவர்.
ரங்கனாதரிடம் தீவிர பக்தி கொன்டவன்.இவருடைய பக்தி மற்றும் ஆற்றலைக் கண்டு  பான்டிய ராஜா தன் பெண்ணை இவருக்கு மணம் முடித்தான். இவருக்கும் ஒர் ஆண் மகவு  பிறந்த‌து. மகனுக்கு திடவிரதன் என்று பெயர் சூட்டினான்.
நாளாக நாளாக,போரில் பல உயிர்கள் மடிவது குலசேகருக்கு வேதனையைக் கொடுத்தது.
ராமனைப் பற்றி உபன்யாசஙகள் கேட்பதில் ஆர்வம் கொன்டவனாக
இருந்தான்.அந்த சமயத்தில் உபன்யாசகர், ராமன் அசுரர்களை அழிக்க இலக்குமணனை சீதா
பிராட்டிக்கு காவல் வைத்து விட்டு சென்றதை விவரித்துக் கொன்டிருந்தார்.
இதைக் கேட்ட,குலசேகரர உடனே தன் சேன்யங்களை ராமனுக்கு உதவச் செல்லும்படி ஆணை இட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உபன்யாசகர் ராமர் தனியாகவே  அசுரரகளை வென்று விட்டார், மற்றும் இது நடந்தது திரேதாயுகத்தில், இப்போது அல்ல  என்று சொல்ல பின்பு தான் அமைதியானார் என்றால் பார்த்துக்கொள்ளுஙகள்.
இவர் அனுதினமும் பூஜை செய்வதற்காக ஒரு ராமர் விக்கிரஹத்தை சிலை வடிவத்தில்  செய்து பூஜித்து கொன்டே இருந்தார், நாட்டின் மீது அக்கரை இல்லாமல் இருந்து வந்தார்.
இதை அறிந்த அமைச்சர்கள்,இப்படியே போனால் நாட்டின் நிலைமை மோசமாகிவிடும்  என்று நினைத்து, ராமர் விக்கிரஹ்த்தின் மேல் இருந்த ஒரு நவரத்தின மாலையை எடுத்து  ஒளித்து வைத்து விட்டு, அந்தப் பழியை விஷ்னு பக்தர்கள் மேல் போட்டு விட்டனர்  என்றால் பாருங்கள்.
இதை அறிந்த குலசேகரர், புழுவாகத் துடித்தார். "விஷ்ணு பக்தர்கள் ஒரு நாளும் அப்படிச் செய்து இருக்கமாட்டார்கள். அவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப் பட மாட்டார்கள்" என்று திடமாக நம்பினார்.
இதனை மெய்ப்பிக்க உடனே மெய்க்காவலர்களைக் கூப்பிட்டு ஒரு குடத்தை எடுத்து  வரச் சொன்னார். அதில் ஒரு பாம்பை போட்டார். "விஷ்ணு பக்தர்கள் மாலையை எடுத்து  இருந்தார்கள் எனில் இந்தப் பாம்பு என் கைகளைக் கடிக்கட்டும" என்று கைகளை  குடத்துக்குள் விட்டார். என்ன அதிசியம் பாருங்கள்!
பாம்பு அவரை ஒன்றும் செய்யவிலை.
இதனைக் கணட‌அமைச்சர்கள் மறைத்து வைத்திருந்த மாலையை திருப்பிக் கொடுத்து  தாங்கள் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டனர் என்றால் பாருங்கள்.
இதனைத் தான்
 "வாரம் கொடுகுடப் பாம்பில் கையிட்டவன்"
என்று தனியனாக முன்னர்  பார்த்தோம்.
இப்போது புரிந்ததா, குலசேகரனின் விஷ்ணு பக்தி?
இதனால் மனம் நொந்த குலசேகரர் அரசாட்சியை தன்னுடைய புதல்வனிடம் அளித்து விட்டு,இராமபிரானின் பல்வேறு புனிதத் தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டார்.
இராம பிரானைப் போலவே அரங்கனாதனிடமும் பக்தி கொண்டிருந்தார். தான் நீண்ட நாள்  ஆசைப்படி திருவரங்கத்தில் தங்கி எம்பெருமானை சேவித்து, அவ்வழகிய மணவாளனையே தான் திருமகள் சேரகுலவல்லிக்குத் மணம்செய்வித்தார்.
இன்றும் ஸ்ரீராமநவமி அன்று  அரங்கன் சேரகுலவல்லி நாச்சியாரோடு சேர்த்தி கண்டருளுகிறார். குலசேகரன் வீதி என்று  வழங்கும் மூன்றாவது பிரகாரத்தை அரங்கனுக்குக் கட்டினார்.
திருவேங்கடவனைப் பற்றிப்  பாடும்போது, எழுமலையில் மீன், செண்பகப்பூ, பொன்வட்டில் போன்ற ஏதேனும் ஒன்றாக  இருந்து,
    "படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே"
என்று பெருமானின் முன்னே படியாக இருக்க வேண்டினார். பெருமானும் இவர் பக்தியை மெச்சி  திருவேங்கடவன் முன்னால் உள்ள படிக்கு இவர் பெயரே வைத்து,
"குலசேகரன் படி"
என்றே அருளினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பெருமாளிடம் அதிக பக்தி கொனண்டிருந்ததாலோ என்னவோ,
இவர் "குலசேகரப் பெருமாள்" என்று அழைக்கப்பட்டார்.
குலசேரகப்பெருமாள், பெருமாள் மீது பக்தி சொட்ட சொட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
அவை "பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படுகிறது.
105 பாசுர‌ங்கள் கொண்டதாகும் அது.
இதில் அரங்கனாதனைப் பற்றி முதல் திருவந்தாதியில் பதினோரு பாசுரங்கள் பக்தி சொட்ட சொட்ட பாடியுள்ளார் என்றால் பாருங்கள்.
மேலும் கண்ணபிரானைப் பற்றி வடமொழியில் " முகுந்த மாலை" என்ற பக்தி ரசம்  சொட்டும் பாசுரங்களையும் பாடியுள்ளார். இதில் என்ன முக்கியமானது என்றால்  வடமொழியில் பாசுரங்களை இயற்றிய ஒரே ஆழ்வார் "குலசேகர ஆழ்வார்" மட்டுமே.
குலசேகர ஆழ்வாரை பெருமாள் அணியும் கெளசத்துபம் என்ற மாலையின் அம்சமாகக்  கருதுவார்கள்.
குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்வசு நக்ஷத்திரத்தில் திருவஞ்சிக்களம் என்ற‌
ஊரில் (கேரளாவில் திருச்சூருக்கு அருகாமையில் உள்ளது) பிறந்தார்.
குலசேகர ஆழ்வார் ராமாவதாராம் பற்றி விஸ்தாராமாக பாசுரங்களாகப் பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார்

திங்கள், 7 மே, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-9. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!




ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-9. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

"உறையிலாடதவர்" யார்?
ஏன் அவருக்கு அப்படிப் பெயர் வந்தது?
பெருமாள் அவருக்கு பயப்படுவாராமே? அவர் சொன்னால் கேட்பாராமே?
எல்லாம் திருமழிசையாழ்வார் பற்றித்தான் !!!
திருமழிசைமற்றும் திருமழிசை பெருமான்

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார் அந்தர்யாமி தத்துவத்தையே முக்கியமாகக் கொண்டு அரங்கனுக்கு  என்று பத்துப் பாசுரங்களை இயற்றி உள்ளார்.
திருமழிசையாழ்வார் யார்?
திருமழிசை என்னும் ஊரில் பார்கவ முனி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் புத்திர பாக்யம்  வேண்டி யாகம் இயற்றி, அவர் மனைவியும் கருவுற்றார். 12 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு, முழுமையற்ற நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
அவர்கள் சென்ற பின்பு, அன்னை மகாலெட்சுமி, அய்யன் விஷ்ணுவுடன் வந்து
அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர்.
அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது. அவரது வலது  கால் கட்டை விரலில் கூடுதலான ஒரு கண்ணும் இருக்கும். அவ்வழியே வந்த ஹரிஜன இனத்தைச் சேர்ந்த திருவாளன் என்பவர், ஸ்ரீமன் நாராயணின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமான அக்குழந்தையை  வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அக்குழந்தையைக் கண்டவுடன் அவரது மனைவியார்  பங்கயச்செல்வி மிகவும் மகிழ்ந்து, தங்களின் குழந்தையற்ற குறையை நீக்கவே  இக்குழந்தை வந்தது என்று எண்ணி அக்குழந்தையை வளர்க்க முடிவு செய்தனர்.
அவர் துணைவியார், அக்குழந்தைக்கு பாலமுது கொடுக்க முயன்ற போது குழந்தை, உணவு உண்ண மறுத்து விட்டது. பல நாள்கள் உணவு
உ ண்ணாமல் இருந்தும் அதன் உடல்நிலை எவ்வித மாறுதலும் இன்றி, நன்றாகவே  இருந்தது. இச்சம்பவம், ஊர் முழுவதும் பரவி, பலர் அக்குழந்தையைக் காண வந்து  சென்றனர்.

ஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக்  கண்டனர். அவர்கள் குழந்தைக்கு, பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது. ஒருநாள், முதியவர் ஒருவரும் வந்து அக்குழந்தையைக் கண்டார்

அக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஞான ஒளியைக் கண்ட அவர், இது எம்பிரான் அருள் பெற்ற, தெய்வக்குழந்தை என்று குறிப்பிட்டு, அக்குழந்தை மிச்சம் வைக்கும் பாலை, அந்த வயது முதிர்ந்த தம்பதிகள்  உண்டால் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் கூறினார். அதைப் போலவே,  அவர்களும் செய்து, ஒரு ஆண்மகவை ஈன்றனர்.
அக்குழந்தைக்கு கனி கண்ணன் என்று பெயர் சூட்டினர்.

கனி கண்ணன், வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை  ஆழ்வாரின் நெருங்கிய நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும்  ஏற்றுக்கொண்டான்.

பேயாழ்வார், திருமழிசையாழ்வாருக்கு, பக்தி சாரர் என்னும் திருப்பெயரிட்டு அழைத்தார். அதன்பின், திருமழிசையாழ்வார் பல திருத்தலங்களுக்குச் சென்று ஆனந்தக்கண்ணனைக்  கண்ணார தரிசித்து, திருவேக்கா என்னும் ஊரை வந்து அடைந்தார்.
யதோத்தகாரி சன்னதியில் தியான நிலையில் இருந்தார்.
அங்கு, அவருக்குப் பொறுப்பாக அனைத்துப் பணிவிடைகளும் செய்த ஒரு மூதாட்டியின்  அன்பிற்கு மெச்சி, அவருக்கு ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். அதைக்கேட்ட  அம்மூதாட்டி, தனக்கு இந்த வயோதிகத் தோற்றம் பிடிக்கவில்லை என்றும், தான் என்றும்  இளமை மாறாத அழகிய இளம்பெண்ணாக இருக்க வரம் தந்தருள வேண்டும் என்று
வேண்டினார். அவர் வேண்டுதலைக் கேட்ட ஆழ்வாரும் அவ்வாறே அருளினார்.
ஒருநாள் நகர்வலம் வந்த பல்லவ மன்னன், அவ்விளம் பெண்ணைக் கண்டு, அவள்  அழகில் மயங்கி, அவளையே மணந்தான்.
ஆண்டுகள் பல கழிந்தன. மன்னனுக்கு மூப்பு நிலை வரத்துவங்கியது. ஆனாலும்,  அவன் மனைவி, அதே இளமை மாறா அழகுடன் இருந்தாள். இதைக்கண்டு அதிசியத்த  பல்லவ மன்னன், அவளின் இளமையின் இரகசியத்தைக் கேட்டான். அவளும்,  திருமழிசையாழ்வாரின் பெருமையை எடுத்துக் கூறினாள்.

மறுநாள், மன்னன் தன் சேவகர்களை அனுப்பி திருமழிசையாழ்வாரை அழைத்து  வரச்சொன்னார். அவர் வர மறுத்து விட்டார். மீண்டும், ஆட்களை அனுப்பினார்.
கனிகண்ணன், அங்கு சென்றார்.மன்னன், கனி கண்ணனிடம், 'என்னைப் புகழ்ந்து  உன் குரு பாட வேண்டும்', என்று கூறினார்.ஆனால், கனி கண்ணனோ,
'எம் குருநாதர் எம்பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பாட மாட்டார்
என்று கூறினார்.சரி போனால் போகட்டும் விடு நீயாவது என்னைப் பற்றி பாடு"
என்று மன்னன் கனிகண்ணனிடம் ஆணையிட்டார்.
ஆனால் கனிகண்ணனோ பாட மறுத்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன்,
 அவரை அந்த ஊரில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.
கனிகண்ணன் விரைந்து திருமழிசையாழ்வாரிடம் வந்து, அரண்மனையில்
நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, தான் திருவேக்காவை விட்டுப் புறப்படுவதாகவும். அதற்காகத் தன்னை மன்னித்து ஆசி அருள வேண்டும் என்று வேண்டினார்,

கனிகண்ணனார். திருமழிசையாழ்வார் தானும் உடன் வருவதாக கனி கண்ணனிடம் கூறி,  உடன் புறப்பட்டார். புறப்படும் வேளையில், காஞ்சியில் வீற்றிருந்த எம்பெருமானை உடன்  வருமாறு ஆணையிட்டார், ஆழ்வார்





யதோக்காரி பெருமான்

"கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"
என்று பாடினார் திருமழிசையாழ்வார்.

அவர் சொன்னவுடன், எம் பெருமானும் அவர்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார். கனிகண்ணன் ஊரை விட்டுச் சென்றதால், காஞ்சி மாநகரம் தன் பொலிவை எல்லாம்  இழந்து, ஒரே நாளில் நலிவுற்றுவிட்டது. மறுநாள் காலை, பணியாளன் ஒருவன் விரைந்து வந்து மன்னனிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அனைத்தையும்  அறிந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்து அவர்களைத் தேடிச் சென்று, அவர்களின்  காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர்களை மீண்டும் காஞ்சிக்கு வர வேண்டினான்.
அவர்களும், மன்னன் கூற்றுக்கு இசைந்து, காஞ்சிபுரம் செல்ல முடிவு செய்தனர்.
இப்பொழுது,

"கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"

என்று ஆழ்வார் கூற, மீண்டும் ஸ்ரீநிவாசன், காஞ்சியில் வாசம் செய்யத் துவங்கினான்.
நம்ம கனிகண்ணன், கமலக்கண்ணன், திருமழிசையாழ்வார் மூணு பேரும் ஓர் இரவு
ஒரு இடத்துல தங்கியிருந்த இடம்தான் 'ஓர் இரவு இருக்கை' அப்படின்னு
அழைக்கப்படுகிறது. அந்தப் பெயர் மருவி தற்காலத்தில், 'ஓரிக்கை' ன்னு சொல்றாங்க.
அதன் பிறகு, சிறிது காலம் கழித்து திருமழிசையாழ்வாரும், கனிகண்ணனும்
திருக்குடந்தை நோக்கிப் பயணித்தனர். அங்கே காவிரியாற்றில் அவர் பாடிய
பாடல்களை இட்ட போது அனைத்தையும் காவிரித்தாய் எடுத்துக் கொண்டு
திருச்சந்த விருத்தம் (120 பாசுரம்) மற்றும் நாண்முகன் திருவந்தாதி (90 பாசுரம்)
ஆகிய இரண்டை மட்டும், திருமழிசையாழ்வாரின் பொற்பாதத்தில்
சேர்ப்பித்தாள். அவர் அவற்றை எடுத்துக் கொண்டு குடந்தை ஆரவமுதப் பெருமாளிடத்தில்  வந்து சேர்ந்தார். செல்லும் வழியில் "பெரும்புலியூர் " என்ற கிராமத்தில் ஓர்  அந்தணர் வீட்டுத் திண்ணையில் சிறிது நேரம் இளைப்பாறினார்.அங்கு வேதம்  ஓதிக் கொண்டிருந்த அந்தணர்கள், ஆழ்வார் பெருமை அறியாமல்,அவர் தாழ்ந்த  ஜாதி என்று நினைத்து, அவர் காதில் வதம் வேதம் விழக கூடாது என்று வேதம்  ஓதுவதை நிறுத்தி விடுகின்றனர். இதனைக் குறிப்பாக அறிந்த ஆழ்வார்,அங்கிருந்து  செல்லத் தொடங்கினார். அந்தணர்கள் மறுபடியும் ஓதுவதற்கு தொடங்க எண்ணி  விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க, மறந்துபோய் தவித்தார்கள்.இதைக் கண்ட ஆழ்வார்,
விட்ட இடத்தை, நினைவு படுத்த எண்ணி அருகில் இருந்த கருப்பு நெல்லை
தன் நகத்தாலே பிளந்து, அச்செயல் மூலம், விட்ட இடத்தை உணர்த்தி அருளினார்.
"க்ருஷ்ணானாம் வரீஹீணாம் நக நிர்பி ந்தம்" என்ற இடம் தான் அது.
இதை உணர்ந்த அந்தணர்கள் அவரை தெண்டனிட்டு மகிழ்ந்தார்கள்  என்பது சரித்திரம்.
ஆராவமுத பெருமான்.
ஆராவமுதன் எம்பெருமான், இவர் எந்த பக்கம் திரும்பினாலும் அந்தப் பக்கம்
திரும்புவானாம். இதை அறிந்த பெரும்புலியூர் அடிகள் இவருக்கு அக்ரபூஜையும்  செய்தாராம். இதைக் கண்ட பலரும் இவரை ஏசினர். உடன் ஆழ்வாரின் திரு  உள்ளத்திளிருந்து பெருமான் தோன்றி அனைவரது வாயையும் அடைத்தான்.
இவரை இறைவனிடம் உரிமையோடு பேசுபவர். அதனால் இவருக்கு " உறையிலாடதவர்"
என்று பட்டம் உண்டு.
   நடந்த கால்கள் நொந்தவோ நடுங்கு ஞால மேனமாய்,
     இடந்தமெய்கு லுங்கவோவிலங்குமால்வரைச்சுரம்
  கடந்தகால்ப ரந்தகாவிரிக்கரைக்கு டந்தையுள்,
     கிடந்தவாறே ழுந்திருந்து பேசுவாழி கேசனே!!
என்று எம்பெருமானை எழுந்திருந்து பேசச் சொன்னார். இதனால் குடந்தைப் பெருமானும்  எழுந்திருந்த நிலையில் "உத்தான சயன" நிலையில் இன்றும் காட்சி அளிக்கிறார் என்றால் ஆழ்வாருக்கு  எவ்வளவு பெருமை செய்து இருக்கிறார் என்பது புரியும்.
இந்த நெருக்கத்தால், ஆழ்வார் தன் பெயரை "திருமழிசைப் பிரான்" என்றும், பெருமாள்  "ஆராவமுத ஆழ்வார்' என்றும் மாற்றிக்கொண்டு விட்டார்கள் என்றால் பாருங்கள்.
பின், திருக்குடந்தையிலேயே தங்கி எம்பெருமான் பெயரில்
மங்களசாசனம் பாடினார்.

ஞாயிறு, 6 மே, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-8. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

திருக்கோவிலூர் உலகளந்த பெருமான்



ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-8. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

திருக்கோவிலூர் இடைகழியில் நடந்தது என்ன?
அன்று மழை. இடியுடன் கூடிய மழை. ஊழி பெருநீர் என்பார்களே அப்படி ஒரு மழை.!!!
ஆழ்வார்கள் பாடிய பாசுரத்தில் உள்ளது போல் அப்படி ஒரு மழை.
      












 திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்












 ஸ்ரீரங்கம் ஆண்டாள் உலகளந்த பெருமான் தோற்றத்தில்



கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்
             கதுவாய்ப்பட நீர்முகந்து ஏறி எங்கும்
         குடவாய் பட நின்று மழை பொழியும்
             கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
கடலில் இருக்கும் எல்லாத் தண்ணீரையும் மேகங்கள் மொண்டு கொண்டு அப்படியே  மழையாய் பெய்தால் எப்படி இருக்குமோ அந்த அளவு மழை பொழியும் நாள். இருட்டோ கண்ணனைப் மையிருட்டு. எடுத்து ஒட்டிக கொள்ளலாம் போல இருட்டு. யார் முன்னர் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத இருட்டு. அந்த சமயத்தில், எங்கு ஒதுங்குவது என்று தெரியாமல், சரி இந்த இடைகழி (இடைகழி என்றால் தெரியாதவர்கள்  வீட்டில் உள்ள முன்னோர்களைக் கேட்கவும்.அதனை ரேழி என்றும் அழைப்பர்.) நமக்குப் போதும்  என்று, அந்த சிறிய இடத்தில் மழைக்காக ஒதுங்குவோம் என நினைத்து ஒதுங்கினார்.
அப்போது பார்த்து மற்றொருவரும் அருகில் வந்து, முன்னவரிடம், "நானும் ஓதுங்கலாமா?"
என்று வினவினார்.
முன்னர் ஒதுங்கின நபரும்
"ஒருவர் உறங்கலாம் ,இருவர் நிற்கலாம். எனவே நீங்களும் உள்ளே வாருங்கள்"
என்று வந்தவருக்கு இன்முகம் தந்து அருளினார்.
மழையோ நின்றபாடில்லை.  அந்த சமயம் பார்த்து, மூன்றாமவர், அதே இடத்துக் வந்து, யாரோ இருக்கிறார்கள் என்பதை  உணர்ந்து, அவர்களிடம்,
"நாமோ ஒரு ஏழை, வெளியே மழை எனவே இந்த இடத்தில் நாம் ஒதுங்கலமா?"
என்று வினவினார்.
முன்னர் ஒதுங்கி இருந்த இருவரும், கும்மிருட்டில் ஒருவருக்கொருவர் பார்த்துக்  கொள்வதாக நினைத்துக் கொண்டு,
"ஒருவர் உறங்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்." என்றனர்.
எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள். நாமளா இருந்தா என்ன பண்ணுவோம்? இங்கே ஒன்னும் இடம் கிடையாது. எங்களுக்கே இடம் கிடையாது, நீங்க வேறே ஹிம்சை பண்ணாதிங்கோ,  வேறே எங்கேயாவது இடத்தைப் பார்த்துப் போமையா", என்போம்.
மூவரும் அந்த இடைகழியில் சிறிது நேரத்தைப் போக்கினர்.
சிறிது நேரத்தில் மூவருக்கும் மூச்சு முட்டத் தொடங்கியது. ஏனெனில் நாலாவதாக ஒருவர்  வைத்திருப்பதை மூவரும் உணர்ந்தார்கள்.
முதலாமவர், "யாரப்பா இது, இப்படி நெருக்குவது? மூன்று பேருக்கு மேல நிற்கமுடியாத  இடத்தில் நாலாவது நபர?" என்றார்.
இரண்டாமவர், "இந்த இருட்டில் யார் வந்துள்ளார் என்பதை விளக்கை
ஏற்றிப் பார்த்து விடுவோம். அது சரி விளக்குக்கு எங்கே போவது?"
முதலாம்வர்,  "விளக்கு என்பதே விளக்கத்தானே? இல்லாத ஒன்றை வைத்து நாமே ஏற்ற  முடியுமா பார்ப்போம்." என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் போது,
"ஓம் நமோ நாராயணாய "
என்ற எட்டு எழுத்து மந்திரத்தில் "நம" என்ற "ந" என்றது "இல்லை", "ம" என்றதும், "இல்லை"
"இல்லை இல்லை", எல்லாம் எனதில்லை, எல்லாம் பரம்பொருள் தானே கொடுத்தது, எனவே  அவனை வைத்தே விளக்கை ஏற்றுவோம்"
என்று சிந்தித்து,
"உலகத்தேயே அகல் விளக்காய் ஏற்றி, அதில் சுழ்ந்த கடலையே நெய்யாக்கி, கதிரவனேயே  நெருப்பாக்கி (திரியாக்கி), சக்கரம் கொண்ட முதல்வனின் திருவடிக்கு சொல் மாலை சூட்டி, மனித குலத்தின்  இருளை நிக்குவோம்",
என்று விளக்கில் இருந்தே விளக்கை எடுக்கிறார்
         வையம் தகளியா வார்கடலே நெய்யாக
                  வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
         சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
                  இடராழி நீங்குகவே என்று!
என்று முதல் பாசுரம் தோன்றியது.
உடனே இரண்டாமவர், முதல் விளக்கிலிருந்து விளக்கை எடுத்து, தன் பங்குக்கு
       "வாழ்வைத் தாங்கும் அன்பை அகல் ஆக்கி, இறைவனிடம் ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கி  சிந்தனையையே திரியாக்கி, நாராயணனுக்கு ஞானத் தமிழில் சொன்னேன்"
என்று ,
            அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
                இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
            ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
                ஞானத் தமிழ்புரிந்த நான்
அந்த இரண்டு விளக்குகளும்  வந்திருப்பவன் யார்  என்பதை உணர்த்திவிட்டன.
மூன்றாமவர்  உடனே,
   " உலகனைத்தும் ஆளும் மகாலக்ஷ்மியைக் கண்டேன், அதுவும் ஒப்பிலாத அப்பன் திரு மேனியில்,திருமார்பில் கண்டேன், சங்கு சக்கரங்களுடன் பொன்னாழி கண்டேன்,
             திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
                 அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
             பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
                  என்னாழி வண்ணன்பால் இன்று
மூவரும் உணர்ந்து கொண்டனர் வந்திருப்பது திருமால். தங்களை உய்யக்
கொள்வதற்குதான் வந்திருக்கிறான் என்று உணர்ந்தனர்.
ஆக இத்தனை நேரம் நாம் சொல்ல வந்தது முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார்  ஆகியோர்களைப் பற்றித்தான். இடைகழி என்ற இடம்  திருகோவிலூர் திவ்யஸ்தலம் தான்.
ஆம், திவ்யப் பிரபந்தம் பிறந்த இடம் தான் திருகோவிலூர். பிரபந்தங்களுக்கு ஆரம்பம்  திருக்கோவிலூர்.
உலகளந்த பெருமான் தன் கையில் சக்கரத்தையும் சங்கையும் மாற்றிப் பிடித்துள்ளான்.
ஆம் வலக்கையில் சங்கையும், இடக்கையில் சக்கரத்தையும் பிடித்துள்ளான்.
பூங்கோவல் நாச்சியார் என்பது தாயாரின் திருநாமம். இன்றைக்கெல்லாம் தாயாரைப்  பார்த்துக் கொண்டே இருக்கலாம். நம்முடைய கண் தாயாருக்கு பட்டு விடும் போல அவ்வளவு அழகு போங்கள்.

முதலாழ்வார்கள் மூவரும் மூன்று திருவந்தாதிகளைப் (ஒவ்வொன்றும் நூறு பாசுரங்கள்  பாடி உள்ளார்கள். அதில் ஒவ்வொருவரும் திருவரங்கனுக்கு எனத் தனித்தனியாக பாசுரம்  பாடியுள்ளார்கள்.
பொய்கை ஆழ்வார்
பொய்கையாழ்வார் திருவரங்கனை கருவரங்கத்திலேயே கண்டாராம், கை தொழுதாராம்  அப்படிப்பட்ட திருவரங்கனை மறப்பேனோ என்கிறார். (இதில் வேடிக்கை என்னவென்றால்  பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார்,மற்றும் பேயாழ்வார் மூவரும் ஒரு தாயாரின்  வயிற்றிலேயே பிறக்கவில்லை என்பது தான் உண்மை)
பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார் திருவரங்கன் எங்கே உள்ளான், அவனுக்கு என்று மனதில் உள்ளேயே  பெரிய கோயில் கட்டி உள்ளாராம், அதனை பாலாலயமாகக் கொள்ள வேண்டுமாம்,  பின்னர் பெரிய கோயில் கட்டுவேன் என்கிறார்.
பேயாழ்வார்
பேயாழ்வார் ஸ்ரீரங்கம் எதற்குச் சமம் என்று விளக்குகிறார் தன்னுடைய பாசுரத்தில்.
மூன்று ஆழ்வார்களும் வைகுந்தவாசனாகிய, பரவாசுதேவனையே பற்றிப்   பாசுரங்கள் பாடியுள்ளார்கள்.

வியாழன், 3 மே, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-7. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-7. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன் என்ற தலைப்பில் ஆறு பகுதிகள் பார்த்தோம். மற்ற ஊர்களை விட ஸ்ரீரங்கம்  ஏன் உயர்ந்தது என்ற கேள்விக்கு முடிவில்லாத பதிலைத் தான்  நாம் பெறமுடியும்,  சொல்லிக்கொண்டே போகலாம்,
பிரம்மத்தை நேரில் பார்க்கமுடியாது. அவன் த்ருஷ்டம் அல்ல, அத்ருஷ்டம். கண்களாலோ, காதுகளாலோ, ஏன்  ஐம்புலன்களாலும் உணரமுடியாது..ஏன்? இவைகள் அளாவுக்கு உட்பட்டவை. பின் எப்படிப்  பார்ப்பது? அதாவது அளவுக்கு உட்பட்ட கருவிகளால் அளவுக்கு உட்படாத பிரம்மத்தைப்
காண முடியாது. சாஸ்த்ரம் ஒன்றுதான் அவன் யார் என்று உணர்த்தும். அவன் இன்னான் , இனியான் என்று உணர்த்தும்.' அப்படிப்பட்ட கண்ணால் காணமுடியாத ஸ்ரீமன் நாராயணனை  எங்கே பார்க்கலாம்? ப்ரமாணம், பிரணவாகார விமானத்தில் சேவித்துக் கொள்ளலாம்.
ரங்கனை ஷேஷியாகவும், தங்களை ஷேஷனாகவும் அனுபவித்துப் பாடியுள்ளார்கள்.
ஸ்ரீரங்கம் பிரணவாகார விவானத்தைப் பார்த்தாலே இந்த தத்துவம் அவர்கள் மனதில் படுமாம்.
ஸ்ரீரங்கம் 108 திவ்ய தேசத்தில் பிரதான ஷேத்ரம். எல்லா விஷயங்களிலும் பிரதானமானதாகும்.
ஆத்மாக்கள் எல்லாவற்றிலும், ஆத்மா வேறு, தேகம் வேறு என்று அறியாமல் இருக்கிறோம். மேலும் ஆத்மா பெருமாளுக்கு அடிமை என்று நாம் நினைப்பதில்லை. இங்கு அடிமையாக  இருப்பது தான் விசேஷம். எல்லாரும் பெருமாளுக்கு அடிமையாக இருக்க ஆசைப்பட  வேண்டும். அவனிடம் என்ன குணம் இருக்கு என்று ரங்கனைத் தேர்ந்தெடுக்கவேண்டும்?
"அவனிடம் என்ன குணம் இருக்கு? அவனோ எங்கோ இருக்கிறான், அவனால் என்ன செய்ய முடியும்? அவனுக்குப் போய் அடிமையாக இருக்கிறேன் என்கிறாயே? பக்கத்து விட்டு மனிதன் உனக்கு எல்லா  உதவிகளையும் செய்யமாட்டானா?" என்று தோழி கேட்கிறாளாம். அதற்கு நம்மாழ்வார்,
.  "நம்பி யைத்,தென் குறுங்குடி நின்ற, அச்
   செம்பொ னேதிக ழும்திரு மூர்த்தியை,
   உம்பர் வானவ ராதியஞ் சோதியை,
   எம்பி ரானை யென் சொல்லி மறப்பனோ!! (திருவாய்மொழி 10ம்பத்து 9வது பாசுரம் -2782)
இத்தனை அழகும்,குணங்களும் கொண்ட ,தென்குறுங்குடி நின்ற, தங்கத்தை உருக்கி வார்த்தால் போன்ற  மேனிகொண்ட உம்பர் வானவர் சோதியை ஆன நித்ய விபூதியில் இருக்கும் எனக்கு எல்லாமும்  செய்த அவனை என்ன சொல்லி மறப்பனோ?"
என்று பதில் கூறுகிறார். நம்மைப் படைத்து, காத்து அனைத்தையும் கொடுப்பவனுக்கு அடிமைத்  தொழில் புரிவதில் தப்பில்லை. ரங்கன் ஆண்டான், தாம் அடிமை, என்று அப்போது நாம் அடியேன்  என்கிறோமோ அப்போதே நாம் புனிதமாகிவிட்டோம் என்று பொருள். இதைத் தான் எல்லா ஆழ்வார்களும் தங்கள் பாசுரங்களிலும் சொல்லி உள்ளார்கள். 

அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார்?
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கத்தை ஆழ்வார்கள் எப்படி அனுபவித்தார்கள்?
தமிழில் ஐந்தாவது வேதமாகிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அரங்கனுக்காகவே 247 பாசுரங்களை  அனுபவித்துப் பாடியுள்ளார்கள். பத்து ஆழ்வார்கள் அரங்கனை மங்களாசாசனம்  செய்துள்ளார்கள்.
அதாவது ரங்கன் ஆண்டான், தான் அடிமை என்ற பாவத்தில் பாடியுள்ளார்கள்.

பதின்மர் பாடிய பெருமாள்"

"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய பாசுரங்கள் 247.
இதில் ஒரு விசேஷம் உள்ளது?
என்ன அப்படிங்கிரிங்களா?
தமிழ் எழுத்துக்களில் உள்ள உயிர், உயிர்மெய் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கையும்  அதுதான். தேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம் என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதி உள்ளார்

"ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்!
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்!
தோலாத தனிவீரன் தொழுத கோயில்!
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்!
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்!
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்!
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்!
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே!

முதலாழ்வார்கள் என்று சொல்லகூடிய பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய  மூவரும் அரங்கனைப் பாடியுள்ளார்கள். இவர்கள் சந்தித்த இடம் திருக்கோவிலூர்.
திருக்கோவிலூர் இடைகழியில் நடந்தது என்ன?
பார்ப்போம்!!!!

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

ஸ்ரீரங்கம் ஏன்?-பகுதி-6


ஸ்ரீரங்கத்துக்கு அரங்கன் வந்தார்!!

pranavakara_vimanam_side, sriragamப்ரனவாகாரா விமாநம்
ஸ்ரீரங்கம் ஏன் என்ற தலைப்பில் ஐந்து பகுதிகள் பார்த்தோம். மற்ற ஊர்களை விட ஸ்ரீரங்கம்
ஏன் உயர்ந்தது என்ற கேள்விக்கு முடிவில்லாத பதிலைத் தான்  நாம் பெறமுடியும், சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் அப்படிப்பட்ட ஸ்ரீரங்கத்துக்கு ரங்கநாதர் ஏன் வந்தார்? மற்ற திவ்ய தேசங்களை விட ஸ்ரீரங்கம் அவருக்கு ஏன் பிடித்தது? அதைப் பற்றியது தான் இந்தப் பகுதி.
த்ரேதா யுகம், இது நான்கு யுகங்களில் முதல் யுகம்.
அயோத்யா என்ற அபராஜிதா என்ற ஊரில் இக்ஷ்வாகு என்ற ஷத்திரிய வம்சத்து மன்னன்
ஆண்டு வந்தான். அபராஜிதா என்றால் ஜெயிக்கமுடியாத என்ற பொருளாம்.
அதே சமயத்தில் சத்யா லோகத்தில் பிரம்மா பெருமாளை நோக்கி தவம செய்தார்.
பெருமாளும் மனம்  மகிழ்ந்து
"என்ன வேண்டும்" என்றார்.
"சத்யா லோகத்தில் நான் வணங்க ஏதுவாக விக்கிரஹ ரூபத்தில் தேவரீர் எழுந்தருளவேண்டும்"
Photo0159_001நீர்க் குமிழியாகத் தோன்றிய பிரணவாகார விமாநம்:

 

என்றார்.
அப்போதே திருப்பாற்கடலில் ஒரு நீர்குமிழி உருவாகியது. அது சிறிது சிறிதாக வளர்ந்து,
"ஓம்" என்ற எட்டு எழுத்து மந்திரத்தை உள்ளடக்கிய பிரணவாகார விமானம் உருவாகியது.
அதன் உள்ளே "நாராயணன் என்ற ஜெகநாதன்" என்ற பெயருடன் கூடிய சயனக்கோலத்தில்
இருந்த மூலவர் காட்சி அளித்தார்.
"இந்த விக்கிரஹத்தை வைத்து பூஜை செய்" என்று பெருமாளும் பிரம்மாவுக்கு ஆணை
இட்டார். அந்த விக்கிரஹத்தை கருட பகவான் மூலம் சத்ய லோகத்துக்கு எழுந்தருளப்
பண்ணிக் கொண்டு வந்து ,ரொம்ப வருஷங்கள் பிரம்மாவும், இந்த விக்கிரஹத்தை வைத்து
பூஜைகள் செய்து வந்தார்.Photo123ஸ்ரீரங்க விமாநம்
முன்னரே சொன்ன இக்ஷ்வாகு மன்னன் அடிக்கடி சத்ய லோகத்துக்கு செல்வானாம்.
பூலோகத்துக்கும் சத்யலோகத்துக்கும் 50 கோடி யோசனை தூரமாம். அதாவது 500 கோடி
மைல்களாம். இப்படி இக்ஷ்வாகு மன்னன் பிரம்மாவை பார்த்துப் பேசும் போது, ஒரு சமயம்
பிரணவாகார விமானத்தைப் பார்த்து விட்டான்.
ஆச்சர்யம் அதிகமாகி,
"சயனக் கோலத்தில் இருக்கும் நாராயணனை எங்கள் ஊருக்கு கொடுங்களேன்,
நான் அயோத்தியாவில் பூஜித்து வருகிறேன்"
என்று பிரம்மாவிடம்  வினவினான்.
"இல்லை, இல்லை, நான் பெருமாளிடம் யாசித்து வாங்கிவந்தேன், அதனால் இங்குதான்
இருக்கவேண்டும்",
என்று பிரம்மா சொன்னார்.
"உன்னிடம் தான் ரொம்ப நாட்கள் இருந்துவிட்டாரே? நான் என்னுடைய சரயு நதிக்கரையில்
வைத்து கொஞ்ச நாட்கள் பூஜை செய்கிறேனே. மேலும் பெருமாள் இங்கிருந்து என்ன
உபயோகம்? அவருடைய தயை, கருணை போன்ற குணங்களை வெளிப்படுத்த சத்யலோகம்
சரியில்லை, பூலோகத்தில் தான் தப்பு பண்றவன் நிறையப் பேர் உள்ளார்கள். பூலோகத்தில்
தான் அவரின் கருணைக்கு வேலை, ஆதலால் பெருமாள் பூலோகத்தில் இருக்கவேண்டும்."
என்று இக்ஷ்வாகு பிடிவாதம் பிடித்தார்.
வேறே வழில்லாமல்
"சரி, பெருமாள் நினைத்தார் என்றால் நாம் என்ன செய்யமுடியும், அவர் விருப்பபடுவதால்
தானே உன் கண்ணில் இத்தனை நாட்கள் படாமல் இன்று பட்டு இருக்கிறார்."
என்று பிரம்மா வேறு வழியன்றி, மனசில்லாமல், இக்ஷ்வாகு எடுத்துச் செல்ல அனுமதித்தார்.
உடனே பிரணவாகார விமானத்தை கருடன் மேல் ஆரோகணித்து அயோத்திக்கு
எழுந்தருளப் பண்ணினார்.இக்ஷ்வாகு. இக்ஷ்வாகு பூஜை செய்தபிறகு, அவன் காலத்திற்கு
பிறகு 35 அரசர்கள் திருவாராதனம் செய்துள்ளார்களாம்.
ஆனால்!!!
பெருமாளுக்கு மனக்குறை!!!
என்னையா மனக்குறை என்கிறீர்களா?
திருவாராதனம் செய்யும் போது என்ன செய்யக்கூடாதாம்?
பேசக்கூடாதாம், முடியுமா? திருவாராதனம் செய்யும் போது தான் போன் வரும், அப்பத்தான்
ஏதாவது சாமானை கடையில் இருந்து வாங்கி வா என்பார்கள்.
புஷ்பம் வாங்கி வந்தவுடன் முகர்ந்து பார்ப்போம், கூடாதாம். இல்லையா பின்னே?
அப்பத்தான் முதுகு அரிக்கும், சொரியக் கூடாது, முடியுமா பாருங்கள்!
இப்படி பலவிதமான அபசாரங்கள் செய்வோம், இத்தனையும் பொறுத்துக் கொள்கிறார் பெருமாள்!
ஆனால் அவன் ஆராதனைக்கு எளியவன்.
வேறே சிந்தனை செய்யாமல், அவன் மீது மட்டும் சிந்தனையுடன் செய்யவேண்டுமாம்.
அந்தக் காலத்திலேயே சரியான முறையில் திருவாராதனம் செய்யவில்லை
போலிருக்கு. அதுதான் பெருமாளுக்கு மனக்குறை என்று சொன்னோம்.
பார்த்தார். தானே தான் போய் திருவாராதானம் செய்ய வேண்டும் என நினைத்தார்.
ராமனாக அவதரிப்பது என்று முடிவெடுத்தார். தசரதனுக்கு மகனாகப் பிறக்கத் தீர்மானித்தார்.
ஓ!!
இதுதான் காரணமா பூலோகத்தில் பிறக்க?
நாங்கள் என்னவோ ராவணனை சம்ஹாரம் செய்ய என்று நினைத்தோம்!
அப்படி இருந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் பிறந்து இருக்கலாமே? தசரதனுக்கு
பிறப்பதன் மூலம் தான் நினைத்த மாதிரி இரண்டு காரியங்களையும் பூர்த்தி செய்து
கொண்டார்.
அதுசரிய்யா, எப்ப ரங்கநாதர் ஸ்ரீரங்கத்துக்கு வந்தார்? அதச்சொல்லுமைய்யா! கேட்பது புரியுது!
அயோத்தியில் ராம பட்டாபிஷேகம் முடிவடைகிறது. எல்லாரும் விடை பெற்றுக்
கொள்கிறார்கள். எல்லாருக்கும் அவரவர்களுக்கு ஏற்ப பரிசுகளைக் கொடுத்து
அனுப்புகிறான் ராமன். விபிஷனனை கூப்பிட்டு
"ஆராதாய ஜகந்நாதம் இஷ்வாகு குல தெய்வதம்"
என்று சொல்லி, இக்ஷ்வாகு குலம் ஆராதனம் செய்த பெருமாளை விபிஷனனிடம் கொடுத்தார்.
விபிஷணனும் மகிழ்ச்சியாக தான் ஊர் இலங்கை நோக்கி கிளம்பினான்.

Photo0137
அப்படிப் பறந்து செல்லும் போது இந்த ஊரின் மேல் பயணித்தான். அப்ப இந்த ஊருக்கு
சேஷ பீடம் என்று பெயராம். அந்த சமயம் பங்குனி பிரம்மோத்சவம் உத்சவம் நேரம்.
ராமன் விமானத்தைக் கொடுக்கும் போதே எல்லா உத்சவங்களையும் விடாமல் செய்யும்படி
ஆணையிட்டுள்ளார். எனவே அங்கேயே உத்சவத்தை நடத்த தீர்மானித்து ஊரைப் பார்க்கிறான்.
"வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆளும் சோலை
      கொண்டல்மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
          அண்டர் கோன் அமரும் சோலை அணி
திருவரங்கம் என்னா" 

என்றபடி ஊரின் இரு பக்கமும் காவிரியும் கொள்ளிடமும் (வடதிருக்காவிரி) சூழ்ந்த, பெருக்கெடுத்து ஓடும் நதிகளைப் பார்க்கிறான். அப்படிப்பட்ட இந்த சேஷ பீடத்தில் விமானத்தை ஏளப் பண்ணினான். ஒன்பது நாட்கள் பங்குனி பிரம்மோத்சவத்தை நடத்தினான்.
விமானத்தை எடுத்துக்கொண்டு இலங்கைக்கு பயணிக்கத் தீர்மானித்தான்.
ஆனால்!!!
பெருமாள் அசைவதாகத் தெரியவில்லை. அந்த சமயத்தில் இந்த ஊர் அரசன் தர்மவர்மா
"பெருமாளை இங்கேயே விட்டு விட்டுச் செல்லுமே" என்று விபிஷணனிடம் மன்றாடுகிறான்.
"இல்லை, இல்லை, ராமன் எனக்கு என கொடுத்த பெருமாள், நான் எங்க ஊருக்குத்தான்
எடுத்துச் செல்வேன்" என்கிறான் விபிஷணன்.
"ஒண்ணு பண்ணுவோம், பெருமாளையே கேட்போம். அவன் உன்னோடு வந்தால் நீ எடுத்துப்
போகலாம்" எகிறான் தர்மவ்ர்மா.
"அதுவும் சரிதான்" என்று விபிஷணனும் ஒத்துக் கொண்டு பெருமாளைப் பார்க்கிறார்கள்.
பெருமாள் முகத்தைப் பார்த்தான் விபிஷணன், அவர் இங்கேயே இருக்கத் தீர்மானித்து
விட்டார் என்பதை உணர்ந்து கொண்ட விபிஷணன்,
"சரி நானும் இங்கேயே உங்களுடனேயே இருந்து விடுகிறான்"
என்று பெருமாளிடம் வேண்டுகிறான்.
"அது சரியில்லை, உனக்கு என ஊர் உள்ளது, அதற்காகத் தான் ராமன் உனக்கு
பட்டாபிஷேகம் செய்துள்ளான். எனவே இலங்கைக்குக் கிளம்பு" என்கிறார் பெருமாள்.
"உங்களை எப்படி விட்டுவிட்டுப் போவது" என்கிறான் விபிஷணன்.
"கவலைப் படாதே, இங்கிருந்து கொண்டே உன்னைப்  பார்த்துக்கொள்கிறேன்"
என்று அவனுக்கு அபயப் பிரதானம் கொடுத்து,
   "குடதிசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
     வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
     கடல்நிறக் கடவுள் எந்தை அரவனைத் துயிலுமா கண்டு"
என்று தொடண்ரடிப்பொடி ஆழ்வார் சொன்னதைப் போல,
"உன்னப் பார்த்துக் கொண்டே இங்கேயே இருக்கிறேன்"
என்று சொல்லி தென் திசை இலங்கையை நோக்கி சயனித்துக் கொண்டிருக்கிறான்,
அன்று தொடக்கமாக இன்று வரை,
          "நல்லார்கள் வாழும் நளிரங்கமாக
             அத்தர் பத்தர் சுற்றி வாழும் அந்தனிற் அரங்கமாக
"
 
          "வண்பெரு வானகம் உய்ய அமரர் உய்ய 
             மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய
       துன்பமிகு துயர் அகல அயர்வு ஒன்றில்லாச் 
          சுகம்வளர அகமகிழும் தொண்டர்வாழ
     அன்போடு தென்திசை நோக்கி பள்ளி கொள்ளும்"

என்று குலசேகரர் சொன்னபடி எல்லாரோடும் சேர்ந்து என்னிக்கு சேவிக்கப் போகிறேனோ?
என்றபடி நம்குலம் இருக்கும் வரை இருந்து, நம் அனைவருக்கும் அருள் பாலித்துக்
கொண்டேதான் இருப்பார் என்பதில் ஐயமில்லை.
ஸ்ரீ. உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து. நன்றியுடன் 

http://krishnalakshmi48.opendrive.com/files/54741267_j0Tcb_7df9/part1margazhi.mp3

https://krishnalakshmi48.opendrive.com/files?54741267_j0Tcb

சனி, 17 மார்ச், 2012

ஸ்ரீரங்கம் பகுதி-5

ஸ்ரீரங்கம் பகுதி-5

IP02-5648
முற்கலன், பூலோக வாழ்வு முடிந்த படியால் அவனை இழுத்து வந்து நரகத்தின் வாசலில்
நிறுத்துகின்றனர். நரகத்தின் உள்ளிருந்து எமன் (நமன்) வெளியே வந்து
"ஏன்யா, இப்படி வந்து நிற்கிறாய்?

நீ ஒருதடவையாவது கடவுள் நாமத்தை சொல்லாமல் என்ன செய்தாய்? கடவுள் நாமத்தைச் சொல்வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்
தெரியுமா?
"சஹஸ்ரநாமம் என பகவானின் நாமங்கள் ஆயிரம் உள்ளதே? அதில் ஒரு நாமத்தையாவது
சொல்லி இருக்கலாமே?
                "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
              சஹஸ்ரநாம தத் துல்யம் ராமநாம வராநநே!!"
என்று ராம நாமம் கூடவா உனக்குத் தெரியாது? என்று கடவுள் நாமத்தின் மகிமையைப் பற்றி முற்கலனுக்கு விளக்கிச் சொல்லிக்
கொண்டிருந்தான் எமன்."
"ரங்கா" என்று ஒருதடவை சொல்லி இருந்தால் நரகத்திற்கு வந்திருக்க வேண்டாமே?
         "அறிவிலா மனிதர் எல்லாம்* அரங்கமென்று

                  அழைப்பராகில்*
            பொறியில்வாழ் நரகம் எல்லாம்* புல்லெழுந்து

                  ஒழியுமன்றோ?"
அறிவு இல்லாத மனிதன் கூட ஓரு தடவை "அரங்கா" என்று அழைத்தால் நரகம் எல்லாம் புல் முளைத்துப் போயிருக்கும்.  எனக்கு வேலை இருந்திருக்காதே ஐயா! இது மட்டுமா
"அரங்கா" என்று சொல்லாத உனக்கு, இடும் சோற்றை நாய்க்கு இடுங்கள், அது கூட
நன்றியோடு இருந்திருக்கும் ஐயா!"
   "               அணி திருவரங்கம் என்னா*
       மிண்டர் பாய்ந்து உண்ணும சோற்றை* விலக்கி நாய்க்கு இடுமினீரே!"
"உங்களுக்காகத் தானே தொண்டரடிப்பொடிஆழ்வார், போன்ற ஆழ்வார்கள் எல்லாம்,
சொல்லி இருக்கிறார்கள். நீ ஒரு தடவை கூட சொல்லவில்லை போலிருக்கு"
என்று எமன் முற்கலனிடம் நாமத்தின் மகிமையை விளக்கிச் சொல்லி விட்டு தன் வேலையாளிடம்,
"இவனை நரகத்துக்கு இழுத்துப் போங்கள்"
என்று ஆணை இட்டுவிட்டு தான் இருப்பிடத்தை நோக்கி நகருகிறான்.
நரகத்தைக் காணோம்!
உள்ளே செல்ல முற்படும், எமனை காவலாளி தடுத்து
"உங்களுக்கு வேலையில்லை, நரகம் எல்லாம் சொர்க்கமாகிவிட்டது ஐயா"
"என்னப்பாசொல்கிறாய்?" என்று எமன் கேட்க,
"ஆம் ஐயா, நாமத்தின் மேன்மையை நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இங்கு அதனைக்
கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் சொர்க்கத்துக்குப் போய் விட்டார்கள்,  நரகம் இல்லாமல்
போய்விட்டது ஐயா!" என்று காவலாளி சொன்னான்.
"நமனும் முற்கலனும் பேச* நரகில் நின்றார்கள் கேட்க*
நரகமே சொர்க்கமாகும்* நாமங்கள் உடைய நம்பி*"

அப்படிப்பட்டது அரங்கனின் நாமம். நாமத்துக்கே  அப்படின்னா, அந்த ஊருக்கு எப்படி
இருக்கும்.
இது மட்டுமா?
"உன் கடைசி ஆசை என்ன?" ன்னு
வயதானவர்களைக் கேட்டுப் பாருங்கள்,
"கடைசிக் காலத்திலே என்னைக் கொண்டு போய் பாடுவான்துறையிலே சேத்துடுங்கப்பா" என்பார்கள்.
அதென்ன பாடுவாந்துரைங்கிங்களா?

Photo0182நன்றி: கிஞ்சித்காரம் டிரஸ்ட் 2012ஆண்டு நாட்காட்டி

திருமங்கை மன்னன் படித்துறை, கொள்ளிடத்தின்
கரையில் உள்ளது.
இது திருமங்கை ஆழ்வார் பற்றியது.
திருமங்கை மன்னன் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்டபின், அவனுக்காக பல இடங்களிலும்
பொன், பொருள் இவற்றைத் திருடி, திருவரங்கத்தின் திருமதிளைக் கட்டினான். ஸ்ரீரங்கத்தில் இவர்
பெயரில் "ஆலீ நாடன் திருச்சுற்று" ஒரு திருச்சுற்று உள்ளது.
மதில் கட்டுவதற்கு உதவிய கம்மாளர்களுக்கு பாக்கி கொடுக்க முடியாமல், படகில் ஏற்றி
ஆற்றில் தள்ளினார்.
பெருமானின் அருளால், எதிர்த்து வந்த அவர்களின் பேரன்களை, காவேரி நீராழி மண்டபத்தில்
நின்று கொண்டு, இறந்து போனவர்களை அழைக்கச் சொன்னார்.  பித்ருக்கள் அனைவரும்
பெருமாளோடு அங்கு தோன்றி
"நாங்கள் ஆழ்வார் அருளோடு பெருமாளோடு சுகமாக  இருக்கிறோம் நீங்களும்
ஆழ்வாரையே தஞ்சமாக பற்றி இருங்கள்"
என்று கூறினர்.
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை பார்த்து
" உம் விருப்பத்தைக் கேளும்" என வினவ
ஆழ்வார்,
      "தங்கள் தசாவதாரங்களை காண்பிக்கவேண்டும்"
என்றார். மேலும் "என்ன விருப்பம்?" என பெருமான் கேட்க,
"நம் பக்தர்களுக்கு உயர் கதி அளிக்கவேண்டும்', என ஆழ்வார் கேட்க,
"உம் வாளை வேகமாக வீசும், அது எங்கு விழுகிறதோ அங்கு இறுதிச் சடங்குகளை
செய்பவர்களுக்கு உயர்கதி அளிப்போம்",
என்றான் அரங்கன்.
ஆழ்வார் தான் வாளை வேகமாக வீச, அது வடதிருக்காவிரியின் கரையில் விழ, அங்கு
"பாடிய வாளன் துறை" என்ற பெயரோடு இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடமாயிற்று.
அதைத் தான் "பாடுவாந்துரை, பாடுவந்துறை" என்று சொல்லுகிறார்கள்.
அப்படி பாடுவாந்துரையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றால் முக்தி நிச்சயம்.
அதற்காகவவாது ஸ்ரீரங்கத்தில் இறக்க வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவார்கள்
ஆக ஸ்ரீரங்கத்தில் இருந்தாலும் சொர்க்கம், மறைந்த பின்னும் சொர்க்கம்.
அதனால் தான் ஸ்ரீரங்கத்தை பூலோக சொர்க்கம் Photo0181என்கிறார்களோ?

நன்றி: கிஞ்சித்காரம் டிரஸ்ட் 2012ஆண்டு நாட்காட்டி

ஸ்ரீ..உ.வே. வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

திங்கள், 12 மார்ச், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-4.


ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-4.

"ஏன் ஸ்வாமி வருத்தமாக உள்ளீர்? நானும் இரண்டு நாளாகப் பார்க்கிறேன்,எதேயோ  பறிகொடுத்தமாதிரி உள்ளிர்கள்?"
தாயார் வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைப் பார்த்துக் கேட்கிறார்.
"நேற்றைக்கு பூலோகம் சென்று இருந்தேன், அங்கு தீபாவளி சமயம். ஒரு வீட்டில்  நடந்த சம்பவம் என்னை பாதிtத் து விட்டது, அதனை நினைத்துத் தான் வருத்தமாக  உள்ளேன்" என்று நாராயணன் லட்சுமியைப் பார்த்துச் சொன்னார்.
"அப்படி என்ன அங்கு நடந்து விட்டது, நானும் தெரிந்து கொள்ளக்கூடாதா ஸ்வாமி?"
"தாராளமாகத் தெரிந்து கொள்".
"கேள்"
பூலோகத்தில் ஒருநாள்:
"ஏன் அம்மா, வருத்தமாக இருக்கே? எல்லாச் சாமான்களும் தான் தீபாவளிக்கு வாங்கி  போட்டுட்டேனே? இன்னும் ஏதாவது வேண்டுமானால் சொல்லு, அதையும் வாங்கிண்டு  வரேன்."
மூத்த பையன் தான் தாயிடம், அவள் வருத்தமாக இருப்பதைப் பார்த்து, வினவினான். தாய்க்கு மூன்று மகன்கள், இருவர் அவளோடு உள்ளார்கள், மூன்றாவது மகனுக்கு  கல்யாணமாகி அவன் தன் மனைவியுடன் அமெரிக்காவில் தற்போதுதான் சென்றுள்ளான், மூத்த மகன் கேட்டவுடன், "இப்போது வரதராஜன் என்ன செய்யரானோ? அவனுக்கு  தீபாவளின்னு தெரியுமோ இல்லையோ? அவன் மனைவிக்கு பட்சணம் எல்லாம் செய்யத்
தெரியுமோ தெரியாதோ? அவனும் நம்மோடு இருந்திருந்தால் நன்னா இருந்து இருக்கும். ஹும், அவனும் நம்மோடு இல்லையேன்னு தான் வருத்தமாக இருக்கு" என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்ற மருமகள்கள்,
"குத்துக்கல்லாட்டம் நாம ரெண்டு பேர் இங்க இருக்கோம், நம்மளைப் பத்திக் கவலைபடாம, அம்மா இருக்காளா, இல்லையான்னு இதுநாள் வரை கவலைப் படாத வரதராஜனையும்  அவன் பெண்டாட்டியைப் பத்தி கவலைப்படுதே இந்தக் கிழம்" ன்னு  அந்த இரண்டு மருமகள்களும் மாமியாருக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள், 
அதே நினைச்சேன், நாம அப்படி கவலைபடாம இருக்கோமேன்னு வருத்தமாக இருக்கு"  பூலோகத்தில் நடந்த, பார்த்த கதையை லட்சுமியிடம் விவரித்தார்,  நாராயணன்.
"அதற்கும் நீங்கள் வருத்தப் படுவதற்கும் என்ன ஸ்வாமி உள்ளது?'
லக்ஷ்மி ஒண்ணும் புரியாமல் வினவினாள்.
"என்ன அப்படிச் சொல்லிட்ட?  நாம் வைகுந்த்தத்தில் சௌக்கியமா இருக்கோம்,  பூலோகத்தில் எத்தனை பேர் கஷ்டப் படறாங்க? அவங்களும் வைகுந்தத்திற்கு வர  வேண்டாமா? அவர்களும் நம்மோடு இருந்தால், அந்தத் தாயாரைப் போல நாமும்  மகிழ்ச்சியாக இருக்கலாமே? அதுக்குத் தான் வருத்தப் பட்டேன்" ன்னு நாராயணன்
லட்சுமியிடம் தான் வருத்தத்தை கொட்டினான்.
"நீங்க சொல்றது சரிதான். அதுக்கு இப்ப என்ன செய்ய உத்தேசம்?"
"நாம பூலோகத்துக்கு போயிட்டா?"  நாராயணன் பதில் சொன்னான்.
"நாம பூலோகத்துலே எந்த இடத்துக்கு போவது?"
"தொண்டரடிப்பொடி ஆழ்வார் மூணாவது விபுதி வேணும்ன்னு சொன்னாரில்லே, அந்தத் திருவரங்கம் போயிடுவோம், அங்கிருந்து கொண்டு எல்லோரையும் திருத்தி  வைகுந்தம் அனுப்பிடுவோம். திருமங்கை ஆழ்வார் அர்ச்சாவதாரம் பற்றி நிறையப்  பாடியுள்ளார், அதனாலே 106 திவ்ய தேசங்கள் தோறும் இருந்து பக்தர்களைத்  திருத்தி வைகுந்தம் அனுப்பிடுவோம். "வைகுந்தம் புகுவது மன்னவர் விதி?"
அதனால் எல்லோரையும் திருத்தி இங்கு அனுப்பிடுவோம். கிளம்ப தயாராக இரு"
என்று நாராயணன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தான்.
ஆக ஸ்ரீரங்கம் மூணாவது விபுதி ஆனது. ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரங்கால் மண்டபம் மற்றொரு பகுதி
அதுக்கு ஏற்றாற்போல் ஸ்ரீரங்கத்தில் ஆயிரம் கால் மண்டபத்தில் நித்ய விபுதி, லீலா விபுதி  மாதிரி, வைகுந்த ஏகாதசியின் போது உண்டாக்குகிறார்கள். ஆயிரக்கால் மண்டபத்தில்,  953 கல் தூண்கள்( ஒவ்வொன்றும் 19 அடி உயரம் கொண்டவை) திருமாமணி மண்டபத்தைச் சுற்றி நித்ய விபுதியாகவும், ஒவ்வொரு ஆண்டும் 47 மரத்தூண்கள் ( ஆக மொத்தம்  1000 தூண்கள்) வெளியே போடற கொட்டகை லீலா விபுதி எனவும் மாறுகிறது.
திருமாமணி மண்டபத்தில் ராபத்து உத்சவத்தின் போது  அரையர் பண் இசைத்து பாடி  வைகுந்தத்தில் உள்ளது போல நடைபெறுகிறது.
என்ன, ஸ்ரீரங்கம் வைகுந்தம் இல்லையா?
உடனே புறப்படுங்கள் வைகுந்தத்திற்கு!!!
ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து திரட்டியவை