திங்கள், 18 ஜூன், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-12. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!


பெரியாழ்வார்!!
பெரியாழ்வார்


திருவில்லிப்புத்தூர் என்னும் பாண்டிய நாட்டில் முகந்த பட்டர்
என்னும் சோழிய பிராமணர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும்
பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது.
விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
இயல்பாகவே வாடா பெருங்கோவிலுடையானிடம் பக்தி கொண்டு இருந்தார்.அவருக்கு நந்தவனத்தில் இருந்து புஷ்பங்களைப் மாலையாகக் கட்டி பெருமானுக்குச் சாற்றுவதை  வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்தசமயத்தில் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு
நகர்வலம் வரும்போது  திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு
வழிபோக்கனைக்  கண்டான். அவனை எழுப்பி “நீ யார்?”  என்று கேட்டான்.
அந்தப் புதியவன் “ஐயா!  நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி
வருகிறேன்“ என்றான். மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும்
உண்டாகில் சொல்“ என்று கேட்டான். அவனும் “மழைக்காலத்தின்
தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில்,
முதுமையின் தேவையை இளமையில்,  மறுமையின் தேவையை
இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான். மன்னன்
மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவு நடந்தவை
சொல்லி “மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன?”  என்று கேட்டான்.
செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை
வைப்போம். சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி
அளிப்போம்“ என்றான். மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட
பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட
ஆணையிட்டான்.
ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய
எம்பெருமான் ஸ்ரீ வல்லபத்தேவன் அரசவையில் நடந்த விபரங்களைக்  கூறி
கிழியை அறுத்து வாவென்றார். இது இறைவன் ஆணை என மதுரைக்குப் புறப்பட்டார்.
மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது
அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர். அங்கிருந்த
மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன்
வரவேற்பதா?  என்று சலசலத்தனர். ஆழ்வாரும் உண்மையான பரம்பொருள்
திருமாலே என்றும் வைஷ்ணவமே முக்தியளிக்கும்  மதம் என வேதத்தை எடுத்து உவமானம் கூற பொற்கிழி தானாகவே வளைந்து கொடுத்தது.
ஆழ்வாரும் வேந்தரும் மாந்தரும் வியக்க விரைந்து கிழியறுத்தார்.
இது கண்ட மன்னனும், நம்பியும், மற்றுள்ள ஆன்றோரும், மக்களும்
அவரைப் பணிந்தனர். மன்னன் இவருக்கு பட்டர்பிரான் என்ற விருது
கொடுத்து யானை மேலேற்றி “வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன்
வந்தான்“ என்ற விருது ஊதச்செயது தானும் தன் பரிவாரங்களும்
உடன்வர நகர்வலம் வந்தான். இக்கோலகலத்தைக் காணுமாறு தன்
மக்களை அரசன் பணித்தபோது தன்னுடைய பக்தனின் மாட்சிமை காண
வந்தாற்போல் ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி, பிராட்டியருடன்,
தனக்குரிய ஆயுதங்கள் தரித்து, பிரம்மா ஆருத்ரன் மற்றும் இந்திரன்
முதலான தேவர்கள் துதிக்க காட்சி தந்தார்.






ஆழ்வார் எமபெருமானின் கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாலும், அவர் மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி, தான் அமர்ந்திருந்த யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, “பல்லாண்டு  பல்லாண்டு பல்லாயிரமாண்டு பலகோடி நூறாயிரம்” என வாழ்த்தி திருப்பல்லாண்டு பாடி அருளினார்.
மன்னன் மற்றுள்ள பக்தர்களையும் தன்னோடு பாடச்செய்தார். இந்த திவ்ய தேசத்தில் விளைந்த இப்பல்லாண்டு தான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்கு திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக  அமைந்து விட்டது. இவர் கண்ணனது திருஅவதாரச் செயல்களை போற்றி 44  திருமொழிகளாகப் பாடினார்.
இவற்றின் மொத்த பாசுரங்கள் 461 ஆகும். திருப்பல்லாண்டு பாசுரங்கள் 12 ஆகும்
மொத்தம் சேர்த்து 473 பாசுரங்கள். இவருடைய பாசுரங்கள்
பெரியாழ்வார் திருமொழி என்று அழைக்கப்பட்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தில்  முதலில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் பாடிய தலங்கள்
1. திருவரங்கம்
2. திருவெள்ளறை
3. திருப்பேர்நகர்
4.கும்பகோணம்
5. திருக்கண்ணபுரம்
6. திருச்சித்திரக்கூடம்
7. திருமாலிருஞ்சோலை
8. திருக்கோட்டியூர்
9. திருவில்லிப்புத்தூர்
10. திருக்குறுங்குடி
11. திரு வேங்கடம்
12. அயோத்தி
13. சாளக்கிராமம்
14. பத்ரிநாத்
15. தேவப்ரயாகை
16. துவாரகை
17. மதுரா
18. ஆய்ப்பாடி
19. திருப்பாற்கடல்
20. பரமபதம்.
 உபதேச ரத்தின மாலையில்,
                 உண்டோ திருப்பல்லானுக்கு ஒப்பதோர் கலை தான்?
      உண்டோ பெரியாழ்வார்க்கொப்பொருவர்?
                தண் தமிழ் நூல் செய்தருளுமாழ்வார்கள்
      தம்மில் அவர் செய்கலையில்
  பைதல் நெஞ்சே! நீ புணர்ந்து பார்
என்கிறார்.
அரங்கநாதன்

அரங்கனுக்கு என 35 பாசுரங்கள் பாடியுள்ளார். அரங்கனைக் கண்ணனாக நினைத்துக் கொண்டு பாடிய பாசுரங்கள் நிறைய. நமன் தன்னைப் பற்றும் போது, அரங்கனை நினைப்போமோ  இல்லையோ, அதனால் இப்போதே சொல்லி விட்டேன், அதனால் நீ என்னை மறக்காமல்  அந்த சமயம் அவனிடமிருந்து என்னைக்காக்க வேண்டும் என்று அரங்கனுக்கே அதிகாரம்
செய்கிறார்.

திங்கள், 11 ஜூன், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-11. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-11. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!
நம்மாழ்வாரின் சரித்திரம். 
 
நம்மாழ்வார், 7ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் அவர் சேனைத்தலைவர் அம்சமாகப் பிறந்தார். தற்போதுள்ள பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார் திருநகரி என்ற திருக்குருகூர் தலத்தில்  அவதரித்தார்.
நம்மாழ்வார், அவதரித்தபோது வாய் திறந்து அழக்கூட இல்லாததால் அவரை இறைவன்  திருவடிகளில் சமர்ப்பித்தனர். அவர் தானாகவே தவழ்ந்து சென்று அருகில் உள்ள  புளியமரத்தின் பொந்தில் போய் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். அவர் அவ்வாறு  16 ஆண்டு காலம் மோனத்தில் இருந்தார்.
இந்த சமயத்தில் அயோத்தியில் மதுரகவி ஆழ்வார் தெற்குதிசையில் இருந்து ஒரு  அதிசய ஒளியைக் கண்டார்.அதை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டார்.
கடைசியில் நம்மாழ்வார் அமர்ந்து இருந்த புளிய மரத்தை அடைந்தார் .
மதரகவியாழ்வாரும் புளிய மரத்தின் பொந்தில் அமர்ந்து  இருந்த சிறுவன் நம்மாழ்வாரைப் பார்த்தவுடன் இவர் இறைவன் அம்சம் எனக் கண்டு
கொண்டார். நம்மாழ்வாரைப் பேச வைக்க புதிர் ஒன்றை வினவினார்.

நம்மாழ்வார்-மதுரகவியாழ்வார்


"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,எதைத் தின்று? எங்கே கிடக்கும்?"

இக்கேள்வியைக் கேட்டவுடன், நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடையளித்தார்.

"அதைத் தின்று; அங்கே கிடக்கும்."

அதாவது, "செத்தது" என்பது நம் உடல்; "சிறியது" என்பது உயிர். உயிரானது உடலினுள்  இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று, அந்த உயிர் உண்மையை (தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது  இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே
நீங்கா நிலைத்துவிடும்.
பதிலைக் கேட்டதும், மதுரகவியாழ்வாருக்கு, உச்சி குளிர்ந்து, உண்மை விளங்கியது.
அப்பதிலால் ஈர்க்கப்பட்ட மதுரகவியாழ்வார், அந்த கணமே நம்மாழ்வாரின்
திருப்பாதத்தில் விழுந்து வணங்கி,

"என்னைத் தங்கள் சீடனாக ஏற்று, இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க
அருள் புரியவேண்டும்," என்று வேண்டினார்.
நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரைத் தன் சீடனாக ஏற்று அருள் புரிந்தார். நம்மாழ்வார்  பாடும் பாசுரங்களை எல்லாம் ஏட்டுச்சுவடியில் எழுதியவரும், அதை மதுரமான இசையில் பாடியவரும் நம் மதுரகவியாழ்வாரே.
ஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயும் போனதில்லை.
எம்பெருமானின் 108 திவ்ய தேசங்களைப் பற்றி நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை  எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன், தன் கருட வாகனத்தில் காட்சியளித்தனர்.
அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில்  தோன்றின.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால்  பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,திருவிருத்தம் -
 இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய  சாராம்சங்களை அமைத்துள்ளார்.
திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது  7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின்  அம்சங்களைக்கொடுத்தருளியிருக்கிறார்.
பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின்  கருத்துகளை ருசிக்கலாம்.
விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும.
அவை இறைவனின் பெயரில் பாடப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும்  அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றன.
திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.
இவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து  தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய  அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து  இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம்.
இவர் இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார்.
தாமிரபரணி ஆற்றின் நீரைக் காய்ச்சி ஒரு உருவம் செய்யச் சொன்னார். அதை பார்த்த மதுரகவியாரும், "இது தங்களைப் போல இல்லையே?" என்றார்.
"ஆம்! இது நாம் அல்லோம்! இது நம்மைப் போல் ஒருவன்! நம்மை அத்தனை பேருக்கும்  எடுத்துச் சென்று சேர்க்கப் போகிறவன்!
 "பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்! கலியும் கெடும் கண்டு கொண்மின்" என்று" பின்னாளில் தோன்றப் போகிற உடையவன் இவனே! இவன் பெயர் 
"பவிஷ்யதாச்சார்யன்! "பின்னாள் ஆசான்!" என்று கூறினார்.
"இவர் தான் பின்னாளில் அரங்கனுக்குத் திருத்தொண்டுகள் செய்து பெறும்
புகழ் பெரபோகிறார். இவரை நாளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுங்கள்"
என்று மதுரகவியாரிடம் சொல்லி விட்டு, மறுமுறை தண்ணீரைக் காய்ச்சி
தன் உருவத்தையும் செய்யச் செய்தார்.
குலமுதல்வன் முதல் தாய் என்றால் ராமானுஜன் வளர்த்த தாய் என்பார்கள்.
          வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
             ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
          முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
             இதத்தாய் இராமானுசன்!


நம் மாறன், இப்படியே இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார் . அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று இவருக்காகவே சொர்க்கவாசலைத் திறந்து வைத்திருந்து,
நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

நம்மாழ்வார் அரங்கன் மீது 12 பாசுரங்களை இயற்றி உள்ளார்.

நம்மாழ்வார் கண்ணனைப் பற்றி பாசுரங்கள் பாடியுள்ளார்.