பெரியாழ்வார்!!
பெரியாழ்வார் |
திருவில்லிப்புத்தூர் என்னும் பாண்டிய நாட்டில் முகந்த பட்டர்
என்னும் சோழிய பிராமணர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும்
பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது.
விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
இயல்பாகவே வாடா பெருங்கோவிலுடையானிடம் பக்தி கொண்டு இருந்தார்.அவருக்கு நந்தவனத்தில் இருந்து புஷ்பங்களைப் மாலையாகக் கட்டி பெருமானுக்குச் சாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்தசமயத்தில் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு
நகர்வலம் வரும்போது திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு
வழிபோக்கனைக் கண்டான். அவனை எழுப்பி “நீ யார்?” என்று கேட்டான்.
அந்தப் புதியவன் “ஐயா! நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி
வருகிறேன்“ என்றான். மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும்
உண்டாகில் சொல்“ என்று கேட்டான். அவனும் “மழைக்காலத்தின்
தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில்,
முதுமையின் தேவையை இளமையில், மறுமையின் தேவையை
இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான். மன்னன்
மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவு நடந்தவை
சொல்லி “மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன?” என்று கேட்டான்.
செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை
வைப்போம். சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி
அளிப்போம்“ என்றான். மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட
பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட
ஆணையிட்டான்.
ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய
எம்பெருமான் ஸ்ரீ வல்லபத்தேவன் அரசவையில் நடந்த விபரங்களைக் கூறி
கிழியை அறுத்து வாவென்றார். இது இறைவன் ஆணை என மதுரைக்குப் புறப்பட்டார்.
மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது
அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர். அங்கிருந்த
மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன்
வரவேற்பதா? என்று சலசலத்தனர். ஆழ்வாரும் உண்மையான பரம்பொருள்
திருமாலே என்றும் வைஷ்ணவமே முக்தியளிக்கும் மதம் என வேதத்தை எடுத்து உவமானம் கூற பொற்கிழி தானாகவே வளைந்து கொடுத்தது.
ஆழ்வாரும் வேந்தரும் மாந்தரும் வியக்க விரைந்து கிழியறுத்தார்.
இது கண்ட மன்னனும், நம்பியும், மற்றுள்ள ஆன்றோரும், மக்களும்
அவரைப் பணிந்தனர். மன்னன் இவருக்கு பட்டர்பிரான் என்ற விருது
கொடுத்து யானை மேலேற்றி “வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன்
வந்தான்“ என்ற விருது ஊதச்செயது தானும் தன் பரிவாரங்களும்
உடன்வர நகர்வலம் வந்தான். இக்கோலகலத்தைக் காணுமாறு தன்
மக்களை அரசன் பணித்தபோது தன்னுடைய பக்தனின் மாட்சிமை காண
வந்தாற்போல் ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி, பிராட்டியருடன்,
தனக்குரிய ஆயுதங்கள் தரித்து, பிரம்மா ஆருத்ரன் மற்றும் இந்திரன்
முதலான தேவர்கள் துதிக்க காட்சி தந்தார்.
ஆழ்வார் எமபெருமானின் கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாலும், அவர் மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி, தான் அமர்ந்திருந்த யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாண்டு பலகோடி நூறாயிரம்” என வாழ்த்தி திருப்பல்லாண்டு பாடி அருளினார்.
மன்னன் மற்றுள்ள பக்தர்களையும் தன்னோடு பாடச்செய்தார். இந்த திவ்ய தேசத்தில் விளைந்த இப்பல்லாண்டு தான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்கு திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக அமைந்து விட்டது. இவர் கண்ணனது திருஅவதாரச் செயல்களை போற்றி 44 திருமொழிகளாகப் பாடினார்.
இவற்றின் மொத்த பாசுரங்கள் 461 ஆகும். திருப்பல்லாண்டு பாசுரங்கள் 12 ஆகும்
மொத்தம் சேர்த்து 473 பாசுரங்கள். இவருடைய பாசுரங்கள்
பெரியாழ்வார் திருமொழி என்று அழைக்கப்பட்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதலில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் பாடிய தலங்கள்
1. திருவரங்கம்
2. திருவெள்ளறை
3. திருப்பேர்நகர்
4.கும்பகோணம்
5. திருக்கண்ணபுரம்
6. திருச்சித்திரக்கூடம்
7. திருமாலிருஞ்சோலை
8. திருக்கோட்டியூர்
9. திருவில்லிப்புத்தூர்
10. திருக்குறுங்குடி
11. திரு வேங்கடம்
12. அயோத்தி
13. சாளக்கிராமம்
14. பத்ரிநாத்
15. தேவப்ரயாகை
16. துவாரகை
17. மதுரா
18. ஆய்ப்பாடி
19. திருப்பாற்கடல்
20. பரமபதம்.
உபதேச ரத்தின மாலையில்,
உண்டோ திருப்பல்லானுக்கு ஒப்பதோர் கலை தான்?
உண்டோ பெரியாழ்வார்க்கொப்பொருவர்?
தண் தமிழ் நூல் செய்தருளுமாழ்வார்கள்
தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே! நீ புணர்ந்து பார்
என்கிறார்.
அரங்கநாதன் |
அரங்கனுக்கு என 35 பாசுரங்கள் பாடியுள்ளார். அரங்கனைக் கண்ணனாக நினைத்துக் கொண்டு பாடிய பாசுரங்கள் நிறைய. நமன் தன்னைப் பற்றும் போது, அரங்கனை நினைப்போமோ இல்லையோ, அதனால் இப்போதே சொல்லி விட்டேன், அதனால் நீ என்னை மறக்காமல் அந்த சமயம் அவனிடமிருந்து என்னைக்காக்க வேண்டும் என்று அரங்கனுக்கே அதிகாரம்
செய்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக