நாமங்களின் மகிமையைப் பாடியவர். நாமங்கள் ஒருவனை நரகத்துக்கு செலுத்தாது என்பதில் கருத்து வேறுபாடு இல்லாதவர்.
அவனின் திருநாமங்களைச் சொன்னால், நமனின் தலையில் வைத்து நடக்கலாம் என்று உறுதியாக இருந்தவர். அவனின் நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால், அரங்கன் கேட்டபோது சொர்க்கம் கூட வேண்டாம், இங்கேயே இருந்து விடுகிறேன் என்று உறுதியாக நம்பியவர்.
ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதாகக் கொண்டால் பாதி ஆண்டுகள் பசி, பிணி, மூப்பு, துன்பம், இளமை பாலகன் போன்று இவற்றிலேயே கழிந்து விடும் என்பதை உணருங்கள்
என்று நம்மைப் பார்த்து அடிக்காத குறையாகச் சொன்னவர்.
தன்னுடைய வாழ்க்கையைப் பார்த்தாவது அப்படி நடக்காமல் திருத்திக் கொள்ளுங்கள் என்று நமக்கு உபதேசம் செய்தவர்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவரின் பெருமையை!!
யார்ரையா அவர்?
கேட்பது காதில் வழிகிறது எனக்கு!
முதலில் அவரின் வாழ்க்கையைப் பாருங்கள்! உங்களுக்கே அவர் யார் என்று தெரிந்துவிடும்!
திருமண்டங்குடி, கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஊர். "விப்ரநாராயனர்" என்று பெயர் சூட்டி, அவருடைய பெற்றோர் அவரை வேதங்களையும் அதன் அங்கங்களையும் கற்பித்தனர்.
கண்டவர் தம் மனத்தையும் அழகையும் கவரும் அரங்கனின் அழகை தரிசித்து, அவனுக்குத் தொண்டு புரிவதே தான் வாழ்நாளின் லட்சியம் என்று வாழ்ந்து வந்தவர்.
அவனுக்காகத் தோட்டம் அமைத்து, மாலை கட்டி, சூட்டி மகிழ்ந்து வாழ்க்கையைக் கழித்து வந்தார்.
அரங்கன் விளையாட நினைத்தால் யார் என்ன செய்ய முடியும்?
திருக்கரம்பனூர் என்ற (தற்போதைய உத்தமர் கோயில்) ஊரில் வசித்து வந்த தேவதாசி, தேவதேவி, தன்னுடைய தோழி மற்றும் தான் தமக்கையுடன் உறையூர் மன்னனை தரிசித்துவிட்டு திரும்பும் வழியில், விப்ர நாராயணர் தோட்டத்தின் வழியாகச் செல்ல நேரிடுகிறது.
"எவ்வளவு அழகான தோட்டத்துக்குச் சொந்தமானவர் யாரோ?"
என்று தன் தமக்கையிடம் கேட்கிறாள்.
தூரத்தில் ஏதும் நடக்காதது போலே விப்ரநாராயணர் பூக்களை பறித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு அழகான தன்னை, தன்னுடைய அழகில் இறுமாப்புக் கொண்டிருந்த தேவதேவி,
"என்னுடைய அழகில் மயங்காத இவர் யார்? இவர் என்ன பித்தரா?"
என்று தன் தமக்கையிடம் கேட்கிறாள்.
" இவர் பித்தர் அல்ல, திருவரங்கனின் தொண்டர். அவனைத் தவிர ஒருவரையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டார். இவரிடம் உன் அழகு ஒன்றும் செய்யாது."
தமக்கை சொல்கிறாள்.
கர்வம் கொண்ட தேவதேவி,
"அப்படியா, பார்த்து விடுகிறேன். இவரை என் அழகுக்கு மயங்க வைத்து, என்னுடைய அடிமை ஆக்கி விடாவிட்டால் என் பெயர் தேவதேவி அல்ல"
சபதம் இடுகிறாள் தேவதேவி.
அரங்கன் இந்த நாடகத்தைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
தன்னுடைய நாடகத்தை நடத்த துவங்குகிறான்.
மறுநாளே தன்னுடைய கோலத்தை சாத்விகமாக மாற்றிக் கொண்டு, விப்ரநாராயணர் திருவடிகளை வணங்கி,
"நான் ஒரு தேவதாசி, என்னுடைய வாழ்க்கையை வீணடித்துவிட்டேன்.
உங்களைப் பார்த்த பின் உங்கள் அடிமையாக இருக்க ஆசைப் படுகிறேன். என்னை உங்கள் அடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு சேவை செய்வதே என்னுடைய பாவங்களைப் போக்கும், என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்"
என்று மன்றாடுகிறாள்.
எவ்வளவோ சொல்லியும் தேவதவி கேட்காததால், வேறு வழியின்றி,
"என்னுடைய ஆசிரமத்துக்கு வெளியே இருந்து தோட்டத்தை கவனித்துக்கொள்"
என்று அனுமதித்தார்.
காலங்கள் ஓடின!!
ஒருநாள்!!!
மழை! ஊழி மழை! நிற்கிற வழியாகக் காணோம்.
ஆசிரமத்துக்கு வெளியே மழையில் நனைந்தபடி, தோட்டத்தில் நின்று கொண்டிருந்த தேவதேவியை பார்க்கிறார்.
"ஆசிரமத்துக்கு உள்ளே வா, இந்த ஆடைகளை உடுத்திக் கொள்"
விப்ரநாராயணர் ஆணையிடுகிறார்.
"இதுக்குத் தானே இத்தனை நாட்கள் காத்துக் கொண்டிருந்தேன்",
என்று நினைத்த தேவதேவி, ஆடைகளை தரித்துக் கொண்டு,
விப்ரநாராயணர் திருவடிகளை வருட, காமதேவன் வசப படுகிறார்.
தான் எதுக்காக வந்தோம் என்பதை மறந்து, சிற்றின்பத்தில் ஈடுபடுகிறார்.
தோட்டத்தை மறந்தார், தேவதேவியே எல்லாம் என்று நினைத்து
காலத்தைக் கழிக்கிறார். அனைத்துச் செல்வங்களையும் இழந்த நிலையில்,
"இனி உனக்கு இங்கு இடமில்லை, வெள்யே போ"
திண்ணைக்கு விரட்டி விடுகிறாள் தேவதேவி.
இத்தனையும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்த அரங்கனின் துணைவி, நாச்சியார்,
"விளையாடியது போதும், நம் பக்தனை மீண்டும் நம் தொண்டுக்கு கொண்டு
வாருங்கள்"
என்று அரங்கனுக்கு ஆணையிடுகிறாள்.
நாச்சியார் கடாட்சம் இருந்தால் அதற்குப் பிறகு, "மறு வார்த்தை ஏது? இப்போதே அதற்கு வேண்டியதைச் செய்வோம்" என்று அரங்கனும், தன்னுடைய தங்க வட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு சிறுவன் வடிவில் தேவதேவியிடம் சென்று,
" நான் விப்ரநாராயணனின் தூதன், அவர் இந்த வட்டிலை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்"
என்று வட்டிலை கொடுக்கிறார்.
மறுநாள் கோயிலில் வட்டிலைக் காணாமல், அரசன் பரிஜாதகர், மற்றும் காவலாளிகளைத் தண்டித்தான். அவ்வழியே வந்த தேவதேவியின் தோழி என்ன நடக்கிறது என்பதை விசாரித்து,
"தங்க வட்டில் தேவதேவியின் தலையணைக்கு அருகில் உள்ளது, இவர்களை
தண்டிக்காதிர்கள்" என்று அரசனிடம் தெரிவிக்கிறாள். உடன் அரசன் தேவதேவியை விசாரிக்க
"விப்ரநாராயணர் தான் அவருடைய தூதன் மூலம் கொடுத்தனுப்பினார்"
என்று அவரைக் காண்பிக்கிறாள்.
"எனக்கு தூதனே கிடையாது"
என்று எத்தனை முறை மன்றாடியும் அரசன் கேட்காமல், விப்ரநாராயணரை சிறையில் அடைத்து விடுகிறான்.
அன்று இரவில் அரசன் கனவில் அரங்கன் தோன்றி, உண்மையைக் கூறி,
"விப்ரநாராயணர் குற்றமற்றவர், அவரை விடுவித்துவிடு"
என்று தன்னுடைய நாடகத்தைக் கூறி அவரை விடுவிக்கிறான்.
சம்சாரத்தின் தாழ்ச்சியையும், பெருமானின் கருணையையும் உணர்ந்த விப்ரநாராயணர், அதற்கு பிராயச்சித்தமாக தொண்டர்களின் பாததூளியையும், ஸ்ரீபாத தீர்த்தத்தையும் கொண்டாடுகிறார்.
அதனால் "தொண்டரடிப்பொடி ஆழ்வார் " என்று பெயர் பெறுகிறார். தேவதேவியும் திருந்தி
கோவிலுக்கு தொண்டு புரிந்து தன் வாழ்நாளைக் கழிக்கிறாள்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார், அரங்கனைத் தவிர யாரையும் பாடாத்வர்.
அரங்கனுக்காக 45 பாசுரங்கள் கொண்ட "திருமாலை" பாசுரத்தைப் பாடியுள்ளார்.
தமிழில் அரங்கனுக்கு என "திருப்பள்ளியெழுச்சி" என்ற பாசுரம் பாடியுள்ளார்.
தமிழில் அதற்குப் பிறகுதான் பலரும் திருப்பள்ளியெழுச்சி பாடியுள்ளார்கள் என்றால் தொண்டரடிபொடி ஆழ்வாரின் மகிமையின் வலிமையைப் பாருங்கள்.
வேறு எந்த அர்ச்சா ரூப பெருமானுக்கும் அமையாத விசேஷம் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள். திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதவர் என்ற ஒரு சொற்றொடர் கூட
வழக்கில் உள்ளது என்றால் இவருக்கு உள்ள மகிமையைப் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக